அரச சொத்துக்களை சூறையாடும் பிரதேச சபை உறுப்பினர் - கண்டுகொள்ளாத காவல்துறை!


மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்படுவதோடு, அனுமதி இன்றி மணல் அகழ்வும் இடம் பெறுவதாக பொது மக்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர், மணல் அகழ்வை நிறுத்துவதற்காக சென்ற நிலையில், குறித்த மணல் அகழ்வை மேற்கொள்ளும் நபரால்,  மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும், ஏனைய அரச அதிகாரிகள், காவல்துறையினர் ஆபாச வார்தைகளால்  திட்டப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் மன்னார் இலுப்பைகடவை காவல்துறையினரும் பிரசன்னமாகியிருந்த போதும் சம்மந்தப்பட்ட நபர் மீதோ சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீதோ எந்த சட்ட நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என்பதுடன் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கையகப்படுத்த கூட காவல்துறையினர் முன்வரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

மேலும் பல மாதங்களாக உரிய அனுமதி இன்றி காடுகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அரச காணியில் மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ள நிலையில் இலுப்பைகடவை காவல்துறையினரோ வனவள திணைக்களமோ எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை கூட வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் காணொளியும் வெளியாகியுள்ளது.