2009 மே 15 வரை களத்திலே இருந்த பிரபாகரன்..! வெளிவரும் இறுதிக்கட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வரை களத்தில் போராடினார். இருப்பினும் உயிரோடு இல்லை. இலங்கை அரசு காட்டியது பிரபாகரனின் உடலும் இல்லை என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றுமுன் தினம் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளதுடன், அரசியல்வாதிகள், முன்னாள் போராளிகள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் தமது மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் போராளிகள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்,

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு மவுனித்துக் கொண்டது. அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு அவருடைய உடல் என சடலம் காட்டப்பட்டது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு முதல் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மகன்களை விட்டு தப்பிச்சென்றிருப்பாரா? யுத்தத்தில் மகன்களான சார்லஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோரை பலி கொடுத்துவிட்டு அவர் மாத்திரம் தப்பிச்சென்றிருப்பாரா என விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், திடீரென பழ.நெடுமாறன் இந்த அறிவிப்பை வெளியிடக்காரணம் என்ன என்பது தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவியுள்ளன.

இருப்பினும், பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருந்த சில போராளிகள் ஊடகங்களில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி வரை பிரபாகரன் களத்தில் இருந்தார் எனவும், கடைசியாக நந்திக்கடல் பகுதிக்கு சென்ற நிலையில் இருபக்கம் நிலப்பரப்பு மற்றொரு பக்கம் நந்திக் கடல். இன்னொரு பக்கம் கடற்பரப்பு. அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என தெரியாது.

பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது எனவும், அவர் உயிருடன் இருந்து அவரே இதனை அறிவிக்கும் வரை உண்மை செய்தி கிடைக்கப்பெறாது என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.