ரணில் பசில் இடையே அரசியல் மோதல் தீவிரம் : விலகிச் செல்லும் சகாக்கள்


சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த காலங்களில் பலமிக்க கட்சியாக தனித்துவமாக விளங்கிய பொதுஜன பெரமுன கட்சி தற்போது பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளன.

ரணிலின் அரசியல் சாணக்கிய விளையாட்டுக்களால் ராஜபக்சர்களின் அடுத்தகட்ட அரசியல் கனவுகள் சிதைந்து போகும் அளவுக்கு வீழ்ச்சி நிலையை நோக்கி நகர்த்து வருகின்றன.

பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்களை பிளவுபடுத்துவதன் மூலம் அந்தக் கட்சியை பலவீனப்படுத்தும் காய்நகர்த்தல்களை ரணில் திறமையாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தாரக பாலசூரிய மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரையும் தனது தேவைக்காக ரணில் தன்னுடன் அழைத்துள்ளார்.

பசில் ராஜபக்ச இலங்கை வந்த பிறகு ரணில் விக்ரமசிங்கவுடன் அதிகார பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் வெல்வதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பசிலுடன் நெருக்கமாக இருந்த நிமல் லான்சா, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூட பசில் ராஜபக்சவை விட்டு விலகி ரணிலுடன் நெருக்கமாகிவிட்டனர்.

அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமித பண்டார தென்னகோன், கனக ஹேரத், காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் பொதுஜன பெரமுன கட்சியின் 70 பேர் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி திரண்டுள்ளதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.