வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போலி தரகர்களை நாடாது சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு செயற்படாத பட்சத்தில் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் காவல்துறையினர் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளனர்.