தேர்தலை குறிவைத்து அரங்கேறும் அரசியல் திட்டங்கள்! ரணிலுக்கு எதிராகும் முக்கிய நகர்வுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் பேரவையின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் செயல்படும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தோல்வியடைய செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குமாரசிரி கூறியுள்ளார்.

சுதந்திர மக்கள் பேரவைக்குள் தற்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

இந்த செய்தியை கட்சியின் உறுப்பினரான கே.பி.எஸ்.குமாரசிரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பொதுஜன பெரமுனவை தேர்தலில் தோல்வியடைய செய்வதற்காக தமது கட்சி தலைமையிலான கூட்டணியொன்றை அமைக்க டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், சுதந்திர மக்கள் பேரவையின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.