பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.

தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் குருந்துவத்தை காவல்துறையினரால் சந்தேகத்தின் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ்சிங்கம் கிருஷ்ணகுமார் என்ற குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.

பிரான்ஸ் தூதரகத்தின் அதிகாரியான எலிசபெத் டெசன் என்பவர் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பிரான்ஸ் செல்ல விசா வழங்குமாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் குருந்துவத்தை காவல்துறை உத்தியோகத்தர் உபாலி பண்டார தெரிவித்தார்.

சந்தேகநபரை பிரான்ஸ் தூதரக அதிகாரி எச்சரித்த போதிலும், பிரச்சனை தொடர்ந்ததன் காரணமாக, அதிகாரி சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து மனநல மருத்துவரிடம் அறிக்கை பெறுமாறு சிறைச்சாலைக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.