கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துங்கள், : தேர்தல் ஆணைக்குழுவில் 125 முறைப்பாடுகள்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளார்.

முன்கூட்டியே கட்டுப்பணம் செலுத்துவதன் மூலம் இறுதி நேரத்தில் எற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான  விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று  செலுத்தியுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் (7) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இம்மாதம் 05ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.    

இதேவேளை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை நாளை (2) அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 10 மனித உரிமைகள் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.