இலங்கையில் பணயம் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர் : பின்னணியில் சதியா


வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

 
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  அரசியல் நோக்கத்துடன் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு நோயாளிகளின் உயிரை  பணயமாக வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது முறையற்றது என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது சுகாதார  சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட  கூற்றை முன்வைத்து உரையாற்றிய அவர்,


 32080  ஆயிரம் ரூபாவாக காணப்படும் சுகாதார சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை  இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக  22040 ரூபாவால் அதிகரித்துள்ளோம்.

சுகாதார சேவையாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்புடன், மேலதிக கொடுப்பனவு, விடுமுறை கொடுப்பனவு உட்பட  இதர கொடுப்பனவுகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் பெறும் போதும் அடிப்படை சம்பள தொகையே கருத்திற்கொள்ளப்படும்.இதனால் தான்  அனைத்து தரங்களில் உள்ள சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இவ்வாறான பின்னணியில் தான் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

 நோயாளிகளின் உயிரை பணயமாக வைத்து ஈடுபடும் இவ்வாறான  பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு  எவரும்  ஒத்துழைப்பு  வழங்க கூடாது. எதிர்க்கட்சிகள் இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். தொழிற்சங்கங்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவே உள்ளோம் என்றார்.