வாய்ப்புக் கிடைத்தால் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொள்வேன் : டெஸ்ட் குறித்து பெத்தும் நிசங்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் சதம் பெற்று ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரராக பதிவான பெத்தும் நிசங்க, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3–0 என முழுமையாக வென்றது. இதில் முதல் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த பெத்தும் நிசங்க நேற்று முன்தினம் 118 ஓட்டங்களை குவித்தார்.

எனினும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பெத்தும் நிசங்க கூறியதாவது, “நான் டெஸ்ட் கிரிக்கெட்டையே அதிகம் விரும்புகிறேன். எனக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்தால் இரண்டு கைகளாலும் அதனை ஏந்திக் கொள்வேன்” என்றார்.

இதன்போது அவர் 52 இன்னிங்ஸ்களிலேயே 2,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். முன்னதான 63 இன்னிங்ஸ்களில் 2,000 ஒருநாள் ஓட்டங்களை எட்டிய உபுல் தரங்கவே முதலிடத்தில் இருந்தார்.

எனினும் தான் சாதனை ஒன்றை முறியடிப்பது தெரியாமல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தனது முதலாவது பயிற்சியாளர் மற்றும் தந்தைக்கு நன்றி கூறுவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக இரட்டைச் சதம் பெற்ற முதல் வீரராக பெத்தும் நிசங்க சாதனை படைத்தார். “இரட்டைச் சதம் பெறுவது எனது கனவாக இருந்தது. இவ்வளவு விரைவாக இதனை எட்டுவேன் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.