கடவுச்சீட்டு : 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்


இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானோர் தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும் அவர்களின் கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 அதன்படி, 3 நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 
அதற்கமைய, பொதுச் சேவைகளின் கீழ் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 90 ஆயிரத்து 817 பேர் பிரதேச செயலகங்களால் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 55ஆயிரத்து 600 பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டன. மேலும், 3 நாள் விரைவு சேவையின் கீழ் 22 ஆயிரத்து 471 பேர் இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 18ஆயிரத்து 770 பேரின் கைரேகைகள் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

 அவற்றில் 17ஆயிரத்து 904 பேரின் பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 
இணையவழியில் விண்ணப்பிக்கும் போது சிலர் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை தெளிவற்ற முறையில் பயன்படுத்தியிருப்பதாலும், சிலர் வேறு நபர்களின் கையடக்க தொலைபேசி எண்களில் விண்ணப்பித்திருப்பதாலும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை அச்சிட முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்களும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் நேற்று பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இந்த விடயங்கள் குறிப்பிட்டுள்ளார்.