விடுதலைப்புலிகளை மீளுருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் உதவி? தீவிரமான விசாரணையை முன்னெடுக்கும் இந்தியா!


பாகிஸ்தானிய உளவுப்பிரிவான இன்டர் சேவிஸஸ் இன்டலிஜனட் (Inter-Services Intelligence) என்ற ஐஎஸ்ஐ அமைப்பினர் தமிழ் தேசியத்தை பயன்படுத்தி மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் செயற்பட வைக்க முயற்சிப்பதாக இந்திய புலனாய்வுத்துறை நம்புகிறது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை, தமிழகம் மற்றும் இலங்கையில் வலுப்படுத்த ஐஎஸ்ஐ முயற்சிப்பதாகவும் நெசனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி(National Investigation Agency) என்ற இந்திய புலனாய்வு சேவை கருதுவதாக தெ பெடரல் செய்தித்தளம் தெரிவிக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்குவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி,அண்மையில், தமிழகம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ் ஏதிகளுக்கான முகாமில் இருந்து 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கும், பாகிஸ்தானின் போதைப்பொருள் முக்கியஸ்தர் ஹாஜி சலீமின் உதவியுடன் ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து கேரளா கொல்லம் கடற்பரப்பின் ஊடாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்ததாக கூறி, கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக இந்திய புலனாய்வுச்சேவை கண்டறிந்தது.

இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை, மேலோங்கச்செய்ய போதைப்பொருள் விற்பனையை பாகிஸ்தானிய புலனாய்வுச் சேவை ஊக்குவிப்பதாக இந்திய புலனாய்வுச்சேவை கருதுகிறது.

குஜராத், காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைகள் பாதுகாப்புப் படைகளால் கண்காணிக்கப்படுவதால், கடத்தல்காரர்கள், ஹெரோயின், மார்பின், ஹைட்ரோகோடோன், ஓபியம், நோர்கோ, கொன்டின், பெர்கோசெட், கோடீன் போன்ற போதைப்பொருள்களை, இலங்கையில் இருந்து விநியோகம் செய்ய தமிழ்நாடு கடற்கரை சிறந்த இடமாக இருக்கும் என்று இந்திய புலனாய்வுச்சேவை சந்தேகிக்கிறது.

இதற்கு மத்தியில் பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஒருவர், ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்று இந்திய புலனாய்வுச்சேவை கூறியுள்ளது.

இந்தநிலையில் அவர்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்புகள் இருக்கலாம் என்று இந்திய புலனாய்வுப்பிரிவு சந்தேகிக்கிறது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே அந்த கோணத்தில், விடுவிக்கப்பட்டவர்களுடன், தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்புகள் உள்ளதா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு அப்பால், இலங்கையின் கரையோரப் பகுதியில் சீனா போதுமான ஆதிக்கத்தை கொண்டுள்ளதாகவும், எனவே தென்னிந்தியாவிலும் விடுதலைப் புலிகளின் தளத்தை மேம்படுத்த சீனா உதவ விரும்புவதாகவும் கூறப்படும் விடயம் குறித்தும் இந்திய புலனாய்வுப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெ பெடரல் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.