அரசாங்கத்தில் இணையத் தயாராகும் ராஜித உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் - பரபரப்பு தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரத்ன உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அதிபர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரவு - செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குறித்த தரப்பினர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக சமன் ரத்னபிரிய தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணையும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அதிபர் ரணில் திட்டமிட்டுள்ளதாகவும் அதிபர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளிலும் குறித்த தரப்பினருக்கு பதவிகள் வழங்கப்படவுள்ளதுடன், இவற்றை அவர்கள் தாமாக நிர்வகிக்க வேண்டுமென அதிபர் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்கள் குறித்து தெளிவு பெற்றிருக்கும் நபர்களும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் அரசாங்கத்துடன் இணைய முன்வந்துள்ள போதிலும், அனைவருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.