யாழில் இப்படியும் ஒரு சம்பவம் - மதுவுக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்தவரின் உயிர் பிரிந்தது


யாழ்ப்பாணத்தில் மதுபானத்துக்கு பதிலாக ஓடிக்கொலோனை குடித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி மதுபான வகைகளின் விலைகளும அதிகரித்துள்ளன.இதனால் மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை குடித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் இவர் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.