தலவாக்கலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!

தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டக்கொடை மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை ) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் முருகையா சரவணன் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வேளையிலேயே உயிரிழந்துள்ளார்.இவரது சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பணத்தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.