சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபருக்கு விளக்கமறியல்!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.“விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது என்று விசாரணைகளின் போக்கில் அறியவரும். அதற்கு பின்னர் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயலாம்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கட்டளை வழங்கினார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மேலதிக நீதிவான், நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டு சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணத்தை முன்வைத்தார்.விசாரணைகள் நிறைவடைவடையாத காரணத்தினால் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று சந்தேக நபரை வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.