இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவு : ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்ற கப்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 15 மில்லியன் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.

மலேசியாவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பயணித்த 120 மீட்டர் நீளமான கொள்கலன் கப்பலில் இருந்து வெளியான இந்த எண்ணெய் கசிவு பிரான்ஸ் அரசின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, கப்பலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை கப்பல் தடுத்து வைக்கப்பட்டு,15 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள இலங்கை, தற்செயலான எண்ணெய் கசிவுகள் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்கள் காரணமாக சுற்றுச்சூழல் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

இந்தநிலையில் பிரான்ஸ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட எண்ணெய் மாசுபாட்டைக் கண்டறிதல் மற்றும் விண்வெளியில் இருந்து மாசுபடுத்துபவர்களை அடையாளம் காண்பதற்கான சேவையை, இலங்கை அரசாங்கம் அண்மையில் சிஎல்எஸ் என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

குறித்த செயற்கைக்கோள் கண்காணிப்பு சேவை மூலமே எண்ணெய் கசிவு மாசுப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.