அரசியல் தீர்வு என்று எதனையும் தமிழ் பேசும் மக்களுக்கு திணிக்க முடியாது : தேசிய மக்கள் சக்தி


தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு காணப்படும். அவ்வாறு தீர்வு காணும்வரை மாகாணசபை முறைமை தொடரும்.
புதிய அரசமைப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். ஒரு கட்சியால் இதனை செய்ய முடியாது. அனைத்து கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.
இதுதான் தீர்வு என தமிழ் பேசும் மக்களுக்கு அதனை திணிக்க முடியாது.

எனவே, இது தொடர்பில் மக்களுடனும் கலந்துரையாட வேண்டும். தீர்வு காணும் கால எல்லை எவ்வாறு அமையும் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையிலேயே தங்கியுள்ளது.

பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் நல்லது. அதற்கான சாத்தியம் தற்போது நிலவுகின்றது.

அதேபோல அடுத்த தேர்தலில் சம்பிரதாயக் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்காது.

பாராளுமன்ற வியூகம்கூட மாறலாம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டாவிட்டால்கூட பொருத்தமான தரப்புகளின் ஆதரவைப் பெறலாம் எனவும் தெரிவித்தார்.