தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது : ரணிலை எச்சரிக்கும் மஹிந்த


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

 ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,

"ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலமும் 5 வருடங்கள். எனவே, அரசமைப்பில் உள்ள ஒருசில ஓட்டைகளைக் காரணம் காட்டி மக்கள் ஆணை வழங்கும் தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது. தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே தீர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க மொட்டுக் கட்சி அனுமதி வழங்காது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழுத்தம் எதனையும் வழங்கவில்லை.
ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் போலிச் செய்திகளையே வெளியிடுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும். ஜனாதிபதி இந்த வாக்குறுதிகளை மீறமாட்டார் என்று நம்புகின்றோம்." என்றார்.