வடக்கு, கிழக்கில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது!



வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் நாட்டில் நிலவிய கடுமையான குளிர் காலநிலை காரணமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தன.

இவ்வாறு உயிரிழந்த கால்நடைகளுக்காக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் திட்டம் கிடையாது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

பல்வேறு காரணிகளினால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும், அவ்வாறே அண்மையில் சீரற்ற காலநிலையினால் இவ்வாறு மாடுகள் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்திருந்ததாக விவசாய அமைச்சின் ஊடகச் செயலாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், உயிரிழந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.