மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை


மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியன்மார் அதிகாரிகளின் உதவியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சு, 2022ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை தொடர்வதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், மியன்மார் அரசு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்த மீட்பு மற்றும் திருப்பி அனுப்பும் முயற்சிகளின் விளைவாக, 2022 மற்றும் 2023 க்கு இடையில் பாதிக்கப்பட்ட 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

அமைச்சுக்கு கிடைத்த தகவலின்படி, 56 இலங்கையர்கள் தற்போது மியன்மாரின் மியாவாடி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு மியன்மார் அரசு அதிகாரிகள் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ள அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்தது.

எவ்வாறாயினும், நிலவும் சூழ்நிலை காரணமாக அந்தப் பகுதியை அணுகுவதில் உள்ள சிரமங்களை மியன்மார் அரசாங்கமும், இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பதாக கூறி, இலங்கையர்கள் வேலை விசாக்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்குப் பதிலாக சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி மியான்மருக்குச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் அதிக சம்பளம் வழங்குவதாக கூறி ஆட்கடத்தல் மற்றும் குற்றவியல் குழுக்கள் அவர்களை தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.