வங்கியில் வைப்பிலிட்டுள்ளவர்களிடம் வரி அறவிட முயற்சி! மோசமான பிரதிபலனை சந்திக்கப் போகும் நாட்டு மக்கள்

வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்காத எதிர்க்கட்சியினர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகலாம்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 மில்லியன் வைப்பாளர்களுக்காக தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அவர்கள் பதவி விலகினால் பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு புதியவர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிப்பார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பவற்றின் வட்டி 9 சதவீதமாகக் காணப்பட வேண்டும் என்று 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானித்தார்.

அன்று அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே இன்று அதனை எதிர்க்கின்றனர்.

அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை அரசியலுக்காக பாவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் முழு நாடும் அழிவை நோக்கிச் செல்லும்.

பணவீக்கம் குறைவடையும் போது வைப்பாளர்கள் அனைவருக்கும் அதன் பலன் கிடைக்கும். வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிடல்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போது, எவ்வித திட்டமிடலும் அற்றவர்கள் அவற்றை குழப்ப முயற்சித்தால் அதன் மோசமான பிரதிபலனை நாடும், நாட்டு மக்களுமே அனுபவிக்க நேரிடும்.

சில விடயங்களைக் கையாளும் போது தேசிய இணக்கப்பாடு அவசியமாகும் என்பதையே ஜனாதிபதி அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்.

எனவே பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளின் போதும் அவ்வாறு தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்  என தெரிவித்துள்ளார்.