ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தான் பதவி விலகுவதாக அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பிற்குச் சென்ற தனது காரை விற்றதுடன், இரண்டு இராஜதந்திரிகளை சந்தித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டார்.

இதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காக சந்தித்தார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்றவகையில் அவசியமான பிடியாணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவரது பதவி விலகல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை நீதிபதி ரீ சரவணராஜா ஒருகிழமைக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றார்.

அத்துடன் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.