உந்துருளி - கொள்கலன் ஊர்தி மோதி கோர விபத்து..! தங்கை உயிரிழப்பு - அக்கா படுகாயம்


திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உந்துருளியும், கொள்கலன் ஊர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது. தாதியுடன் உந்துருளியில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியையே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.