கலவரத்தில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்த ஆளும் தரப்பு உறுப்பினர்!

பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த, சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்தார்" என்று காவல்துறை அதிகாரி குறித்த சர்வதேச ஊடகத்திற்கு  தொலைபேசியில் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கட்டடத்தை ஆயிரக்கணக்கானோர்  சூழ்ந்தனர், அதனையடுத்து அவர் தனது ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.