ஒருவேளை உணவில் புதிய கறி வகைகள் இல்லை : சபையில் ரஞ்சித் பண்டார கவலை

சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை. இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன. இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

 பாராளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்துகொண்டு  உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

அரசாங்கம் 8 பில்லியன் கடனை பெறப்போவதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்த கருத்து உண்மையானது.

நாங்கள் 2 பில்லியன் ரூபாவை கடனாக பெற்று செயற்பாடுகளை முன்வைத்த ஒரு நாடு. இப்போது 8 பில்லியன் கடனாக பெறப்படுகின்றது.

கடந்த 365 நாட்களிலே 2920 பில்லியன் கடனாக பெற்றுள்ளோம். நாங்கள் கடனை திரும்ப செலுத்துவதும் கிடையாது.

எம்மிடம் கலந்துரையாடப்படாத சில விடயங்களும் இருக்கின்றன. அதில் முதலாவது, சாதாரண பொதுமக்களின் ஒருவேளை சாப்பாட்டிலே புதிய கறி வகைகள் சேர்க்கப்படுவதில்லை. இப்போது இருந்த கறி வகைகளும் குறைந்துள்ளன.

இன்று மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

போசாக்கு இன்மை, தொழில்வாய்ப்பு இன்மை, இளைஞர்களின் விரக்தி மனநிலை, அனைத்தும் இந்த நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பினை சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒரேதடவையில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது முடியாமல் இருக்கும்.

ஆனாலும் இவை அனைத்தையும் தீர்ப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.