வடமராட்சியில் பாரிய கொள்ளை -பெருமளவு நகைகளுடன் இருவர் கைது

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபர் ஒருவரும் அவருக்கு உதவியாக இருந்த உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் தொடர்ச்சியாக பூட்டியிருக்கும் வீடுகளை பகல் வேளைகளில் உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில கைப்பற்றப்பட்டதுடன் நகைக்கடை உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்து உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்