அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய எதிர்ப்பு பேரணி - நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ள காவல்துறையினர்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். 

அரசாங்கத்திற்கு எதிராக இன்று  பாரிய எதிர்ப்பு பேரணி ஒன்று நடத்துவதற்கு சர்வமத தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்தே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், ஓல்கோட் மாவத்தையினுள் நுழைவதை தடுக்கும் வகையில் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை தடுப்பதற்கும் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

புறக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்து புறக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கொழும்பு நீதவான் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் தலைமையிலான குழுவினருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும் என காவல்துறை தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.