பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து அகற்றி சுத்தம் செய்வதற்கு ஒன்பது கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து இருநூற்று தொண்ணூற்று மூன்று ரூபா (903,857,293.01) செலவழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலின் கொள்கலன்களில் இருந்து வெளிவந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயன பொருட்களை அகற்றி இந்த நாட்டின் கரையோரத்தை முழுமையாக சுத்தப்படுத்த இன்னும் பல வருடங்கள் ஆகும் என அதன் தலைவி சட்டத்தரணி திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து கடலில் கலந்த 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக்குகள் மற்றும் இரசாயனங்கள் பமுனுகம பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட களஞ்சியசாலைகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் கொடியின் கீழ் பொருட்களை ஏற்றிச் சென்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் ( MV Express Pearl) என்ற கொள்கலன் கப்பல், கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்து மூழ்கியது.

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நைட்ரிக் அமிலத்தால் தீ விபத்து ஏற்பட்டதுடன், கப்பல் மூழ்கும் முன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 1486 கொள்கலன்களில் சில கடலில் விழுந்தன. இந்த கொள்கலன்களில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் மணிகள் கடல் நீரில் கலந்துள்ளதால் மன்னார் முதல் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான 746 கிலோமீற்றர் கடற்பரப்பு முற்றாக மாசடைந்துள்ளது.

நீர்கொழும்பு குளத்தை சூழவுள்ள பகுதிகள், நீர்கொழும்பு கரையோரம் மற்றும் பமுனுகம சக்குகந்த கடற்கரை பகுதிகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலின் கழிவுகளால் மாசுபட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் பணி கடந்த ஆண்டு மே மாதம் 20ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 2723 இடங்களில் 746 கி.மீ., தூரத்திற்கு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.