தபால் திணைக்கள பெயரில் பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை


குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 
மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம் மற்றும் SL Post போன்ற அடையாளங்களையும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 
இந்நிலையில், தபால் மூலம் அனுப்பப்படும் பொதிகளுக்கு தபால் திணைக்களம் குறுஞ்செய்தியூடாக வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி எந்தவிதமான பரிவர்த்தனைகளையும் செய்வதில்லை என்றும் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

 
எனவே, மோசடி செய்பவர்கள் அனுப்பும் போலி குறுஞ்செய்திகளின் அடிப்படையில் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டையின் விபரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.