மரியுபோல் கொலைகாரன் கல்லறைகளை ரசிக்க வந்துள்ளார் - புட்டினுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன்


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்டதை அடுத்து, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.

ரஷ்யா நடத்தி வரும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், உக்ரைனில் இருந்து சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியதற்கு பொறுப்பேற்று, ரஷ்ய அதிபர் புடினை கைது செய்ய கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புடின் நேற்றிரவு உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான மரியுபோல் நகரை பார்வையிட்டார்.

வானுார்தி மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட்டதை குறிப்பிட்டு, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடந்த இடத்திற்கு திரும்புவான்” என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யா அதன் எல்லைகளை தாண்டியதால், நாகரீக உலகம் "போர் இயக்குனரை" (விளாடிமிர் புடினை) கைது செய்வதாக அறிவிக்கும் போது, ஆயிரக்கணக்கான மரியுபோல் குடும்பங்களை கொலை செய்த கொலைகாரன் நகரின் இடிபாடுகளையும் கல்லறைகளையும் ரசிக்க வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாஸ்கோ சுற்றுப்பயணம் வரும் வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், புடினின் இந்த பயணம், மேற்கு நாடுகளுடனான மோதலில் புடினுக்கு இது ஒரு பெரிய இராஜதந்திர ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.