பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்ட பல இலங்கையர்கள் - வெளியான அதிர்ச்சி ஆய்வு!


குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மூலமாக பல இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல ஊடக நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான தேவையைப் பயன்படுத்தி, திறன் தொழிலாளர் விசா முறையைப் பயன்படுத்தி இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பை பெற்ற ஒருவர், தம்மில் தங்கியிருப்பவர்களையும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது இந்த திறன் தொழில் விசாவில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கான உரிமை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தமது தொழில் விண்ணப்பத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பராமரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை பெண் ஒருவர் சமர்ப்பித்த பொய்யான ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

தாதியர் டிப்ளோமா மற்றும் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றுக்கான போலி சான்றிதழ்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களுடன் குறித்த இலங்கை பெண், ஏழு ஆண்டுகள், மருத்துவமனை ஒன்றில் தாதியர் சேவையில் பணியாற்றியுள்ளார்.

அதேசமயம், இரண்டு வருடங்கள் முதியோர் இல்லத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற முறையில் குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டால், மோசடி செய்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், 10 ஆண்டுகள் வரை விண்ணப்பத்தடை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், திறமையான தொழிலாளர் விசா முறையை, எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, பிரித்தானிய உள்துறை அலுவலகம் தற்பொழுது அதன் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்து வருவதாக குறித்த ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.