ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அவர் ஐந்து வருடங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியும்.
அவ்வாறு இல்லாமல் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முற்பட்டால் இறுதியில் தோல்வி ஏற்படும். இவ்வாறு இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும். எனவே, சஜித்துக்கு மூளை இருந்தால் அவர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும். - என்றார்.
இதேநேரம் "ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆளும் - எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் என்றாலும் சரி பொதுத் தேர்தல் என்றாலும் சரி எதுவாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பகட்ட கூட்டங்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மிகவும் பிரமாண்டமாக நடத்துவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் பிரதான அரசியல் கட்சிகள் பிரமாண்டமாக நடத்தி இருந்தன. பெருமளவான மக்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்த பிரசாரக் கூட்டங்கள் ஜூன் மாதம் முதல் நடத்தப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் மக்கள் சந்திப்பு, ஜூன் 8 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குரிய உத்தியோகபூர்வ பிரசாரக் கூட்டமாக இது அமையும் எனக் கருதப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பனவும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
அதேவேளை, உத்தர லங்கா சபாகயவின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜூன் மாதமே பெயரிடப்படவுள்ளார்.