அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து


அரசியலமைப்பு பேரவையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு உறுப்பினர்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஏழாவது உறுப்பினராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது தமது எதிர்பார்ப்பு என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

எனினும் தமிழ் உறுப்பினரை நியமிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் கூட்டணியான உத்தர லங்கா கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் செயற்பாடானது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம் எனவும் திருத்த முடியாத திமிர்வாதம் எனவும் மனோ கணேசன் சாடியுள்ளார்.

இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தெரிவித்தார்.

மேலும் ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பு பேரவையில் நியமிக்க முடியாத நிலையை இனவாதிகள் நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.