காதலியை உளவு பார்க்க பெண் வேடமிட்ட நபர் காவல்துறையினரால் கைது: காலியில் சம்பவம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடை அணிந்து சென்ற இளைஞர் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த குறித்த இளைஞன் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கியுள்ளார்.

அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விசாரித்தனர்.

இதன் போது, பெண் உடை அணிந்திருந்த அவர் ஒரு ஆண் என அடையாளம் கண்டு கொண்ட புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை காலி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் காதலியை உளவு பார்க்கவே தாம் இவ்வாறு வேடம் பூண்டு புகையிரத நிலையத்திற்கு வந்ததாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நாட்டில் இடம் பெற்று வரும் அசாதாரண நிலை காரணமாக பாதுகாப்பு அச்சம் நிலவி வருகிறமையால் மாறு வேடத்தில் வந்த குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.