முரணான கருத்துக்களை வெளியிட வேண்டாம் : மைத்திரியை விமர்சிக்கும் வியாழேந்திரன்


இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு (Easter Attack in Sri Lanka) தாக்குதலின் பின்னணியிலே உள்ளவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithiripala Sirisena) முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடாமல் உண்மையான கருத்துக்களை கூற வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (16.04.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்விலே இவருடைய கருத்துக்கள் தொடர்பாக எதிர்க்கட்சி விவாதத்திற்கு எடுத்திருக்கின்ற நிலையில் நாங்களும் அதில் பேச இருக்கின்றோம்.

500இற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையிலே இன்னும் பல மக்கள் இந்த வடுக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே, இதை நாம் ஓர் சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விடயத்திலே நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இன்னும் சில நாட்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.