வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பெண்களின் அவலம்..! உண்மைகளை அம்பலப்படுத்திய உறவினர்

ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்காச் சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், சாப்பாட்டிற்கு கூட எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் குறித்த பெண்களின் உறவினர்களில் ஒருவரான க.சந்திரிக்கா புஸ்பகுமாரி வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று யாழ். ஊடக அமையத்தில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகார் பிரதேசத்தில் இருந்து கடந்த ஒன்பதாம் மாதம் 17 திகதி குருநாகல் ஏஜென்சி மூலம் குறித்த பெண்கள் ஓமான் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கடந்த 10 மாதம் 18 ஆம் திகதி காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் காவல்துறையினர் 1 மாத தவணையில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்திருந்த வேளையில், காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற முகமது நலீம் என்ற பிரயாண முகவர் மூலம் அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அழைக்குமாறு கேட்டபோது முகவரோ 5 லட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என தெரிவித்ததாகவும், காவல்துறையினர் தன்னை(முகமது நலீம்) ஒன்றும் செய்ய இயலாது என கூறியதாகவும் சந்திரிக்கா புஸ்பகுமாரி தெரிவித்துள்ளார்.