மூட்டை முடிச்சுகளுடன் மெதமுலனவுக்கு இடம்பெயரும் மகிந்த மற்றும் குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு தங்காலை மெதமுலன வீட்டுக்கு செல்லவுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளுக்கு ஆதரவாக நிறைவேற்றியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமூலத்திற்கு ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கு மட்டுமே பதிவானது. சபாநாயகர் கையொப்பமிடும் போது, இந்த சட்டமூலம் சட்டமாக மாறும். புதிய சட்டத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்க வீடுகள் மற்றும் நலன்கள் இரத்து செய்யப்படுகின்றன.

அரசாங்க வீடுகள்

இந்த சட்டத்தின் மூலம், அரச சொத்துகள் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக மீண்டும் ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் விஜேராம வீடு பெரிய பொது செலவுக்குரியதாக விவாதிக்கப்பட்டது

இந்த வீடு மாதத்திற்கு 4.6 மில்லியன் ரூபாவுக்கும் மேல் வாடகைக்கு விடக்கூடியதென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்கனவே கூறியிருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும், இந்த சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

ராஜபக்ச தரப்பினர் முறையான கோரிக்கையுடன் கேட்டால் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக முன்பு கூறியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என விமர்சித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே தனியார் இல்லங்களை மீள ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.