மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரை களமிறக்கியே தீருவோம் : மகிந்த திட்டவட்டம்


ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) எமது கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளரைக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் (Anuradhapura) மத வழிபாட்டில் நேற்று (07.04.2024) ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு, “உங்களது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (Srilanka Freedom Party) பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. உங்களின் அரசியல் அந்தக் கட்சியில் இருந்தே ஆரம்பமானது. ஆகவே, கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன. எனினும், பிரச்சினைகளுக்குப் பேச்சுகள் ஊடாக வெகுவிரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என பதிலளித்துள்ளார்.

பங்காளிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார்களே அது கட்சிக்குச் சவாலாக அமையாதா? என எழுப்பிய வினாவுக்கு சவால் ஏதுமில்லை. தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கூட்டணிகள் ஸ்தாபிக்கப்படுவது இயல்பானதே என கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) குறிப்பிட்டுள்ளாரே? இது தொடர்பில் உங்களது கருத்து என்ன என வினவிய கேள்விக்கு அது அவரது நிலைப்பாடு. நாங்கள் எமது கட்சியின் வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் நிறைவேற்று சபை ஊடாக சிறந்த தீர்மானத்தை எடுப்போம். மிகச் சிறந்த வேட்பாளரை நாம் களமிறக்குவோம் என பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப் போகின்றீர்களா? என கேள்வியெழுப்பிய போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் காலம் உள்ளது.

மேலும், புத்தாண்டு தொடர்பில் மக்களுக்கு ஏதேனும் குறிப்பிட விரும்புகின்றீர்களா? என வினவியதற்கு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நாம் மகிழ்வுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்றும் பதிலளித்துச் சென்றுள்ளார்.