மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 9, 2022 அன்று நடந்த போராட்டத்தின் போது திஸ்ஸமஹாராமாவின் உள்ள தனது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக போலியான தகவலை அளித்து அரசாங்கத்திடமிருந்து மோசடியாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த கைது மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்போது சமல் ராஜபக்ச, சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து அறுநூறு ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, திஸ்ஸமஹாராமாவின் உள்ள சொத்து சமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என்பதும் மாறாக வேறொருவரின் பெயரில் உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ள.
மேலும் குறிப்பிட்ட இடத்தில் வீடு இல்லை என்றும் அங்கு ஒரு நெல் கிடங்கு மட்டுமே இருந்தது என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமல் ராஜபக்ச, சம்பந்தப்பட்ட சொத்தை தனது வசம் வைத்திருப்பதாகக் கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அங்கு ஒரு நெல் கிடங்கு மாத்திரமே இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சொத்து சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, 27.7.2023 அன்று, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர், மேற்படி அமைச்சின் கையொப்பத்தின் கீழ், இழப்பீட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு, அவரது மேற்பார்வையின் கீழ் தொடர்புடைய இழப்பீட்டை வழங்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
எனினும், 20.07.2023 அன்று, மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டாளர் ஒருவர், அங்கு ஒரு வீடு இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ. ஒரு கோடியே 48 ,இலட்சம் ரூபா என்றும் கூறி ஒரு மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி, நெல் கிடங்கிற்கு ஏற்பட்ட சேதம் ரூ. 2 இலட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபா மற்றும் இல்லாத வீட்டிற்கு ஒரு கோடியே 48 இலட்சம் ரூபா என அரசாங்கத்திடமிருந்து சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்து இருபத்திரெண்டாயிரத்து அறுநூறு ரூபாய் மோசடியாக சமல் ராஜபக்ச பெற்றுள்ளார்.
மேலும், இந்தப் பணத்தை செலுத்துவதற்கு சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.