சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு நிறுவனத்திற்கு 179 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இனிமேல் தங்கம் இறக்குமதியை மேற்கொள்ளும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத செயல்களில் இருந்து விடுபட வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.
தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யாமல் மூன்றாம் தரப்பினரிடம் இருந்து வாங்கும் தங்கத்திற்கு, உற்பத்தி அறிக்கைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம் விதிக்கும் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய தங்கம் இறக்குமதிக்கு அடையாளம் காணப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வருடம் மார்ச் மாதம் அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.