சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்


தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு தேர்தல் இன்றி ஒருவரை ஏகனமதாக தேர்ந்தெடுக்கும் வகையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் கலந்துரையாடுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் தேர்தல் ஒன்றின் மூலமே தலைமை தேர்ந்தெடுக்கப்படும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

இந்தநிலையில் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் மத்திய குழு கூட்டத்தினைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், அன்றைய தினமே வெற்றிபெற்ற வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபையிலுள்ள 400 உறுப்பினர்கள் அக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போது வாக்களிப்பதற்கான அட்டைகள் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இவ்வாறான நிலையில், தலைமைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சுமந்திரன், மற்றும் சிறீதரன் ஆகியோர் வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் சுமந்திரன் திருகோணமலைக்குச்சென்று கூட்டங்களை நடத்தியிருந்த நிலையில் சிறீதரன் நேற்று (13) திருகோணமலைக்குச் சென்று கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறான கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.