பௌத்த புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிப்போம்

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் இன்று(18) இடம்பெறும் பொங்கல் வழிப்பாடு தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள இருதரப்பு முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர்.

குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகளில் ஈடுபடலாம் என முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியமை குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

குருந்தூர் மலையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என முல்லைத்தீவு காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர்.

இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஊடாக முரண்பாடுகள் தோற்றம் பெறலாம். குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டில் இனங்களுக்கு இடையில் மீண்டும் இன முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றம் துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.