புறக்கோட்டை தீ விபத்து : சிகிச்சை பலன் இன்றி யுவதி உயிரிழப்பு, 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

கொழும்பு - புறக்கோட்டை, 2 ஆம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இந்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையிலேயே காயமடைந்தவர்களில் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த சம்பவம் பெரும் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.