யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!



யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கிளிநொச்சி, கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் ஆவர். மேலும், கடத்தப்பட்ட நபரும் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரி வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று (02) நபரின் உறவினர்கள் கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வானில் வந்த 12 பேர் அடங்கிய கும்பலே குறித்த வியாபாரியை கடத்திச் சென்றதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வியாபாரி 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை நபர் ஒருவரிடம் வாங்கியதாகவும், அதனை அவர் மீள செலுத்தாத நிலையிலேயே வியாபாரி கடத்தப்பட்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இக்கடத்தல் கும்பல் கிளிநொச்சியில் மறைந்திருப்பதாக கோப்பாய் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு விரைந்த காவல்துறையினர் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐவரையும் கைது செய்ததோடு, கடத்தப்பட்ட பழ வியாபாரியையும் மீட்டுள்ளனர்.

கைதான நபர்களை கோப்பாய் காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.