முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகை என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை அமைச்சில் இருந்து பெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சுகாதார அமைச்சராக இருந்தபோது அவர் இந்த கட்டணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வாடகையைப் பெறுவதற்காக சுகாதார அமைச்சுக்கு, அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் அவர் வழங்கிய பதிவு எண், கிருலப்பனையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் பதிவு எண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாதாந்தம் 2 இலட்சத்து 40 ஆpயரம் ரூபா வாடகை ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சுகாதார அமைச்சக பதிவுகளின்படி, அமைச்சர் பயன்படுத்தியதாக கூறப்படும் பென்ஸ் ரக கார் ஒருபோதும் சுகாதார அமைச்சக வளாகத்திற்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனை தவிர, ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி வழக்குகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு வியாழக்கிழமை 26 ஆம் திகதியன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.
'இந்த அரசு என் மீதும், என் குடும்பம் மீது ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.
என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைத்து வாழ்நாள் முழுவதும் துன்புறுத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.
சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி தேவதை எம்மைக் காப்பாற்றுவாள்." என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.