பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணிபுரிந்த இராணுவ உத்தியோகத்தர் உயிரிழப்பு - வாக்கு மூலத்தில் வெளியான தகவல்!

பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணியாற்றிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் பணியாற்றிய இராணுவ பொறியிலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையிலுள்ள கமல் குணரத்னவின் வீட்டின் கூரையை புனரமைத்துக் கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

அதனையடுத்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பிரேமதாஸ என தெரியவந்துள்ளது.

அவரின் மரணம் தொடர்பில் 37 வயதான மனைவி வத்சலா லக்மாலி விக்ரம குணரத்ன சாட்சியமளித்துள்ளார்.

“உயிரிழந்தவர் எனது கணவர். எங்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு 14 வயதாகின்ற நிலையில், மகனுக்கு 7 வயதாகின்றது.

கணவர் சிறிலங்கா இராணுவ பொறியியல் பிரிவில் பணிபுரிகிறார். கடந்த 25 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரின் வீட்டில் பணியாற்றிய நிலையில் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

முதலில் ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாலை 6.00 மணியளவில் தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்“ எனத் தெரிவித்துள்ளார்.