களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மாணவியின் கையடக்கத் தொலைபேசியை சந்தேக நபர் கடலில் வீசி எறிந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தொலைபேசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக களுத்துறை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாணவியுடன் சென்ற இளம் ஜோடியிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசி கடலில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
குறித்த கையடக்கத் தொலைபேசி கிடைத்தால் பல முக்கிய தகவல்கள் வெளிவந்து விடும் என்பதால் குறித்த மாணவியின் காதலன் என்று கூறப்படும் நபர் அதனைக் கடலில் வீசியுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தால் அவரது தொலைபேசி வலையமைப்பு தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.