சஜித் பிரேமதாசவை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய ஜே.வி.பி. : அதிரடி குற்றச்சாட்டு



கோட்டாபய ராஜபக்‌ச ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்ட காலத்தில் சஜித் பிரேமதாசவை  படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 சிறிலங்கா பொதுஜன பெரமுன   கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த அரகலய போராட்ட காலத்தில் 2022 ஆம் ஆண்டின் மே மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற வன்முறைகளின் போது குருநாகலில் அமைந்திருந்த ஜோன்ஸ்டனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த அலுவலகத்தைப் புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வின் போதே அரகலய போராட்ட காலத்தின் போது தேசிய மக்கள் சக்தி தனது ஆதரவுக் குழுக்களைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை படுகொலை செய்யும் திட்டமொன்றைக் கொண்டிருந்ததாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


இருப்பினும், இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பில் இருந்தோ அல்லது சஜித் தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.