ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மட்டு. ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (31) இடம்பெறுகின்ற நிலையில், சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்ட மறுக்கப்பட்ட நிலையில், ஊடகவியாளர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பல ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த சில ஊடகவியலாளர்கள் இன்றைய கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில ஊடகவியலாளர்களைப் பழிவாங்கும் நோக்குடன் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்களால் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள ஊடக அமைச்சருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்துவதற்கு குறித்த  ஊடகவியலாளர்கள் முயற்சி செய்த போதும் அது கைகூடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஊடக உரிமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையகத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் முறைப்பாடொன்றினையும் மேற்கொண்டுள்ளனர்.