ஜீவன் தொண்டமான் மற்றும் துமிந்த திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சரவை பதவி!

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவையை 30 ஆக ஜனாதிபதியினால் அதிகரிக்க முடியும்.

அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்று அல்லது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.